-->

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது.

பெண் பூப்படைந்த வைபவம் என்றாலும் சரி, திருமண நிச்சயதார்த்தம் என்றாலும் சரி, திருமணம் என்றாலும் சரி மற்றும் எந்த சுபவிழாக்களாக இருந்தாலும் சரி, அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.

வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

மாதுளை


மாதுளையில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என்று 3 வகைகள் உள்ளன.

மருத்துவ பயன்கள் :


* மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது.

* மாதுளம் பூச்சாறும், அருகம்புல் சாறும் சம அளவு கலந்து குடித்து வர மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

* மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

* மாதுளம் பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

* மாதுளம் பூ, மாங்கொட்டை, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து சலித்து, மோரில் கலந்து சாப்பிட கழிச்சல் குணமாகும்.

* கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கி காலை, மாலை இருவேளையும் 4-5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும்.

* மாதுளம் பூ மொக்கை நன்கு காய வைத்து பொடியாக செய்து இருமல் ஏற்படும்போது சிறிதளவு சாப்பிட இருமல் தணியும்.

* மாதுளம் பிஞ்சை குடிநீரில் கலந்து குடிக்க சீதபேதி, கழிச்சல் குணமாகும்.


* மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வர பித்தம் தணியும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மேலும், சுரத்தையும் குணமாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்தக்கூடிய கைகண்ட மருந்தும் இது என்பது கூடுதல் தகவல்.

* மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

* மாதுளம் பழத்தோலுடன் சிறிதளவு இலவங்கம், இலவங்கப்பட்டை சேர்த்து இடித்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி, 2 பங்காக அது வற்றியதும் வடிகட்டி குடித்துவர சீதபேதி குணமாகும்.

* மாதுளம் பழத்தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி, அதனை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவர சளித் தொல்லை தீரும்.

* 300 கிராம் அளவு மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து 200 கிராம் நெய்யுடன் சேர்த்து, நீர்வற்றும் வரை காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் இருவேளை 5-10 மில்லி அளவு சாப்பிட்டுவர அனைத்து வகை மூலமும், உடல் உஷ்ணமும் தணியும்.

* மாதுளை பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து குடிக்க சீதபேதி குணமாகும்.

* மாதுளம் பழச்சாற்றை சிறிது சூடாக்கி, காதில் ஓரிரு துளி விட காதில் சீழ் வடிதல் நிற்கும்.

* மாதுளம் பழச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து 30 மில்லி அளவு காலையில் குடித்து வர நரம்புகள் வலிமையாகும்.

* மாதுளை வேர்ப்பட்டை ஒரு பங்கு, நீர் 20 பங்கு எடுத்து, அதனுடன் சிறிது இலவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்க தட்டைப்புழு வெளியாகும்.

* மாதுளையின் விதை நீர்த்துப்போன வெண்ணீரை இறுக்கும். வெள்ளை நோயை குணமாக்கும். இது உடம்பிற்கு ஊட்டத்தை தருவதோடு, ஆண்மையையும் உண்டாக்கும்.

* மாதுளை தோலின் பொடி, ஜாதிக்காய் பொடி, மாதுளைப்பட்டைச் சாறு ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நாட்பட்ட சீதபேதி குணமாகும்.


* மாதுளம் பழத்தின் சதையுடன் கூடிய விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வெள்ளைத்துணியில் தடவி, துணியை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின்னர், அந்த துணியை திரியாக்கி விளக்கெண்ணெய்விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதில் வரும் கரியை ஒரு தட்டில் பிடித்து, விளக்கெண்ணெய் விட்டு குழைத்து ஒரு சிமிழில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இது தான் இயற்கையான கண்மையாகும். இதை கண்களுக்கு மையிட்டால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

புளி


புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள். வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும். தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.


மருத்துவ பயன்கள் :

* புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது.

* புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.

* புளியிலை ஒரு பங்கு, வேப்பிலை ஒரு பங்கு எடுத்து நன்றாக இடித்து, 8 பங்கு நீர்விட்டு காய்ச்சி 4 பங்காக வற்றியதும் வடிகட்டி, அதைக்கொண்டு புண்களை கழுவிவர ஆறாத ரணங்கள் ஆறிவிடும்.

* புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.

* இளம் பச்சை நிறத்தில் இருக்கும் புளியங்கொழுந்து இலைகளை பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட உடலுக்கு பலம் உண்டாகும்.

* புளியங்கொழுந்தை பறித்து பச்சையாக சாப்பிட கண்களைப் பற்றிய நோய்கள், புண்கள் ஆறும்.

* புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, கண் வலி ஆகியவை நீங்கும்.

* புளியம்பூவை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டுவர பித்தம், வாந்தி, வாய்க் கசப்பு ஆகியவை தீரும்.

* புளியை குழம்புபோல் கரைத்து, அதனுடன் 2 பங்கு உப்பு சேர்த்து காய்ச்சி கொதிக்க வைத்து, இளம்சூடாக இருக்கும் நேரத்தில் அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கத்தில் தடவிவர இரண்டொரு வேளையில் அது கரைந்துவிடும்.

* புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள் நாக்கில் தடவிவர அதன் வளர்ச்சி கரையும்.

* புளியம்பழம், கரிசலாங்கண்ணி இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு 8 நாட்கள் சாப்பிட்டு வர அடிதள்ளல் குணமாகும்.

* புளியை தினமும் ரசத்தில் சேர்ப்பதால் மிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றின் வேகத்தை அது கட்டுப்படுத்தும். உணவில் அளவோடு புளியை சேர்த்துவர ஜீரண சக்தி அதிகரிக்கும்.

* மது அருந்தியதால் ஏற்பட்ட வெறி, மயக்கத்திற்கு புளியை கரைத்து உட்கொள்ள கொடுக்க அது குணமாகும்.

* புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள் கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.


* புளியங்கொட்டையின் மேல் தோலை பொடித்து சீதக்கழிச்சலுக்கு உட்கொள்ள கொடுக்க அது தீரும். இதனுடன் மாதுளம் பழத்தோலையும் பொடித்து உட்கொள்ள கொடுக்கலாம்.

* புளியங்கொட்டையின் மேல் தோலை காய வைத்து தூளாக்கி, 250 & 300 மில்லி கிராம் அளவு தேன் அல்லது சர்க்கரையில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை உட்கொண்டுவர புண்கள், நீர்க்கடுப்பு, வெள்ளை, வெட்டை, கழிச்சல் ஆகியவை குணமாகும்.

* புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.

* புளிய மரப்பட்டையையும், சிறிது உப்பையும் ஒரு பாத்திரத்தில் இட்டு எரித்து சாம்பலாக்கி, அதில் 100 - 200 மில்லி கிராம் அளவு தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.

* புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர தொண்டைப்புண் குணமாகும்.

* புளியம்பட்டையை பொடி செய்து புண்களின் மீது தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசிவர அந்த புண் ஆறும்.

* ஜீரண சக்தியை உண்டாக்கும் புளி மலத்தை இளக்கக் கூடியதும் கூட! என்றாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால் நரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை விரைவில் ஏற்படும்.

பலா


முக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. கேரளாவில் இதை சக்கைப்பழம் என்று அழைப்பார்கள்.
மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.


மருத்துவ பயன்கள் :

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.

* பலா மரத்தின் வேலை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.

* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.


ஒரு எச்சரிக்கை :
பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை :
* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

தென்னை


பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய வெச்சா இளநீருன்னு ஒரு பழமொழியே இருக்கிறது. இதில் இருந்தே தென்னையின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மிகத்துக்கும், தேங்காய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆன்மாக்களுக்கு ஆணவம், கன்மம், மாயை - இந்த மூன்றும் நீங்கினால் இறைவனை அடையலாம் என்கிறது ஆன்மிகம். இந்த தத்துவத்தை தேங்காயும் உணர்த்துகிறது.

அதாவது, தேங்காயின் மேலே உள்ள பச்சை மட்டை மாயை ஆகும். நார் பகுதி கன்மம். தேங்காய் ஓடு ஆணவம். தேங்காயை உடைக்கும்போது ஆணவம் என்னும் ஓடு உடைந்து வெண்மையான பருப்பு வெளிப்படுகிறது.

அதுபோல், இறைவன் திருவடியை அடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அகற்ற வேண்டும். இதனால்தான் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கிறோம்.


மருத்துவ பயன்கள் :

* இளநீரில் அரை மூடி அளவுக்கு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குடிக்க வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

* இளநீரில் தேன் கலந்து குடிக்க சரும நோய்கள் தீரும். வயிற்றுப்புண் குணமாகும். மலச்சிக்கல், மூல நோய்கள் இருந்தாலும் குணம் பெறலாம்.

* இளநீரை முந்தைய இரவே சீவி, அதனுள் சப்ஜா விதை (திருநீற்று பச்சிலை விதை) 10 கிராம் சேர்த்து, சீவப்பட்ட பகுதியின் மட்டையை மீண்டும் மூடி வைத்து, காலையில் குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டாம்.


* இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள், கட்டிகள் வராது. அவை இருந்தால் உடனே குணமாகும். மேலும், மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மையும் இளநீருக்கு உண்டு.

* இளநீரை உணவிற்கு பின் அருந்துவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவது தவறு. அவ்வாறு செய்தால் சிறிது நாட்களில் பசி குறைந்து அல்சர் எனப்படும் குன்ம நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

* தென்னம்பாளைக்குள் உள்ள இளம் தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி, காலை, மாலை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை குணமாகும்.

* தென்னம்பாளை மொக்கை இடித்து, நீராவியில் வைத்து பிட்டாக்கி பிழிந்து, அதனுடன் தேன், அதிவிடயத்தூள், இலவம் பிசின் சேர்த்து குடித்தால் சுரத்துடன் கூடிய கழிச்சல் குணமாகும்.

* தென்னங்குருத்தை உட்கொண்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* இளம் தென்னம்பாளையை வெட்டி, மடல் நீக்கி இடித்து சாறு பிழிந்து 100 மில்லி அளவு எடுத்து, அதனுடன் தயிர் 100 மில்லி சேர்த்து, எலுமிச்சை பழ ரசம் 50 மில்லியும் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு, நீர்சுருக்கு, ரத்தம் அல்லது சீழ் கலந்து வரும் கழிச்சல் குணமாகும்.

* நட்டுவக்காளி கடித்துவிட்டால் உடனே தேங்காயை மென்று தின்னலாம். தேங்காய் பாலையும் குடிக்கலாம். உடனே, அந்த விஷம் இறங்கிவிடும்.

* வயிற்றில் அல்லது வாயில் புண் இருந்தால் தேங்காய் பாலில் தேன் கலந்து குடிக்க, அது ஓரிரு நாளில் குணமாகும்.

* முற்றிய தேங்காய் துருவலை துணியில் கட்டி, அதை சூடாக்கப்பட்ட பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தி, பொறுக்கும் சூட்டில் பாதிப்பு இடத்தில் ஒற்றமிட்டு வர ஆண்களுக்கு விரை வீக்கம் குணமாகும்.

* தேங்காய் பாலை காய்ச்சி, அதில் வரும் எண்ணெயை புண்கள், நெருப்பு சுட்ட புண்கள் மீது தடவி வர அவை விரைவில் உலர்ந்து குணமாகும். இதை, தலையில் தேய்த்து வர கூந்தல் செழித்து வளரும்.

* தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.

* தேங்காய்பால் விட்டு சீரகத்தை அரைத்து பாதிப்பு இடத்தில் பூசிவர வெயில் காலத்தில் ஏற்படும் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஆகியவை குணமாகும்.

* புளிக்காத தென்னங்கள்ளை கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை அழகாக பிறக்கும்.


* வெட்பாலை இலைகளை துண்டு துண்டாக நறுக்கி, அவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து வெயிலில் 10 நாட்கள் வைக்க, அந்த எண்ணெய் கருநீல நிறமாக மாறும். இதனை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால் சொரியாஸிஸ் எனப்படும் செதில் உதிர்படை குணமாகும். இந்த எண்ணெயை 5 மில்லி அளவு பாலில் கலந்து உள்ளுக்கும் குடிக்கலாம்.

* தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை பொடித்து போட்டு காய்ச்சி பூசி வர சளி இளகி வெளிப்படும்.

* தென்னம் வேரை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

ஒரு எச்சரிக்கை :
தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளது. அதனால், ரத்தத்தில் கொழுப்புச்சத்து இருப்பவர்கள் உணவில் தேங்காய் எண்ணெயை தவிர்ப்பது நல்லது.

வாழை



வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது.

பெண் பூப்படைந்த வைபவம் என்றாலும் சரி, திருமண நிச்சயதார்த்தம் என்றாலும் சரி, திருமணம் என்றாலும் சரி மற்றும் எந்த சுபவிழாக்களாக இருந்தாலும் சரி, அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.

வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன.

சந்தனம்


இந்தியாவில் காணப்படும் மரங்களில் மிகவும் விலை உயர்ந்தது சந்தனமரம். இதன் தாயகம் இந்தியாதான். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த சந்தன மரமே வாசனை நிரம்பியது.

சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து கொண்டது. இதில் இருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிவப்பு, மஞ்சள், வெண்மை என்று மூன்று வகை நிறத்தின் அடிப்படையில் சந்தன மரக்கட்டைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. நிறம் இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் மருத்துவக் குணம் ஒன்று தான். எனினும், செஞ்சந்தனம் சில சிறப்பு குணங்களை கொண்டு காணப்படுகிறது.


லேசான துவர்ப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை சந்தனக்கட்டைகள். உடலை தேற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வியர்வையை உண்டாக்குதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கட்டையை தொடர்ந்து உபயோகித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். அறிவும், மன மகிழ்ச்சியும், உடல் அழகும் அதிகமாகும்.


மருத்துவ பயன்கள் :

* சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் உரைத்து, பசையாக செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு ஆகியவை குணமாகும். முகத்தில் இதை பயன்படுத்துவதால் அதில் வசீகரமும், அழகும் உண்டாகும்.

* ஒரு தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

* சந்தனத்தை பசும்பாலில் உரைத்து, சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு தணியும்.

* 2 தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் குடிநீரில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

* சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் இவ்வாறு செய்து காலையில் கழுவிவிட வேண்டும். 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் கண் கட்டி குணமாகும்.

* நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லி எடுத்துக்கொண்டு, அதில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதை கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் மது மோகம் தீரும்.

* சந்தனத்தூள் 20 கிராம் எடுத்துக்கொண்டு, அதை 300 மில்லிலிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 150 மில்லி லிட்டராக வடிகட்டி, 3 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதய வலி ஆகியவை தீரும்.

* பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டை சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் உள்ள ரணம், அழற்சி குணமாகும்.

* உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் சந்தனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

* சந்தனக்கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம்.

* சந்தனாதித் தைலத்தை தேய்த்து தலை முழுகி வந்தால் உடல் சூடு தணியும்.

* சந்தனத்தை உடலில் பூசி வந்தால் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.

* சந்தன விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

* சந்தனத்தை தலையில் அரைத்து பூசி வந்தால் சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள், அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இதயத்துக்கும் உள்ள பலவீனம் சரியாகும்.

பொதுவாக, நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் சந்தனத்தை உடலில் பூசி, அது நன்கு உலர்ந்த பின் குளித்து வரலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உடலில் வசீகரமும், மினுமினுப்பும் வரும். மேலும், உடல் குளிர்ச்சி தன்மையை பெறும்.

ரோஜா



ரோஜாப் பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க முடியாது. காதலர்கள், தங்களது காதலை வெளிப்படுத்தும்போது பரிமாறிக் கொள்ளும் பொருட்களில் இந்த ரோஜாவும் ஒன்று. இதில் இருந்துதான் வாசனைத் திரவியமான பன்னீர் தயார் செய்யப்படுகிறது.

ரோஜாவிற்கு பன்னீர்ப்பூ, சிற்றாமரை என்ற பெயர்களும் உண்டு.


 மருத்துவ பயன்கள் :

* இன்று, சர்க்கரைநோய் என்கிற நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவர்கள், ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, யானை நெருஞ்சில் - இவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை பாலுடன் கலந்து காய்ச்சி, தினமும் இருவேளை குடித்து வந்தால் போதும். சர்க்கரைநோய் குணமாகிவிடும்.

* வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். அவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும்போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

* ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் குணமாகும்.


* ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.

* உலர்ந்த ரோஜா மொக்கு, சதக்குப்பை ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து வைத்துக் கொள்ளவும். 200 மில்லி லிட்டர் தண்ணீரை நன்றாக காய்ச்சி, அதில் மேற்படி தூளைப் போட்டு மூடி வைக்கவும். 3 மணி நேரம் கழித்து வடிகட்டி அதை குடித்துவர, சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, அல்சர் ஆகியவை குணமாகும்.

* ரோஜா மொக்கு 3 பங்கு, நிலவாகை இலை ஒன்றரை பங்கு, சுக்கு ஒரு பங்கு, கிராம்பு 1/4 பங்கு எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக சிதைத்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி ஒரு பங்காக வற்ற வைக்கவும். இதனை இரவில் செய்து வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி குடித்துவர மலச்சிக்கல் நீங்கும். மேலும், மூலநோய், உடல் களைப்பு ஆகியவையும் நிவர்த்தியாகும்.

* ரோஜா இதழ்கள் தேவையான அளவு எடுத்து, அதனுடன் சமஅளவு பாசிப்பயிறும், பூலாங்கிழங்கு நான்கைந்தும் சேர்த்து மை போல் அரைத்துக் கொள்ளவும். இதனை, குளிப்பதற்கு முன் உடலில் பூசி, சுமார் Ñ மணி நேரம் ஊற வைத்த பின்னர் இளவெந்நீரில் குளித்துவர சரும நோய்கள் அனைத்து அகன்றுவிடும். இதனை சோப்பிற்கு பதில் தினமும் பயன்படுத்திவர சருமம் பட்டுபோல் மிருதுவாவதுடன் கவர்ச்சிக்கரமான நிறமும் பெறலாம்.

* ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் தீரும்.

* ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.


ரோஜாப்பூ சர்பத் செய்முறை :

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். அதில், © கிலோ அளவு ரோஜா இதழ்களை போட்டு கிளறி மூடி வைத்து விடுங்கள். 12 மணி நேரம் கழித்து இதனை நன்றாக பிசைந்தால் குழம்புபோல் வரும். அதை வடிகட்டிக் கொள்ளவும்.

இதேபோல், வேறொரு பாத்திரத்தில் 700 கிராம் சர்க்கரையை போட்டு, அதில் 300 மில்லி சுத்தமான தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சுங்கள். பாகு பதத்திற்கு வந்ததும் அதில், ஏற்கனவே குழம்பு போல் வடிகட்டி வைத்த நீரை சேர்த்து மீண்டும் காய்ச்சுங்கள். அதனுடன், 90 மில்லி லிட்டர் பன்னீரை கலந்து இறக்கி ஆற வைத்து பத்திரப்படுத்துங்கள்.

இதில் 2-3 தேக்கரண்டி அளவு எடுத்து, அதனுடன் தண்ணீர் அல்லது பசும்பால் கலந்து குடித்துவர உடல் உஷ்ணம் தணியும்; ரத்தம் விருத்தியடையும்; களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும்; வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

- இதுதான் ரோஜாப்பூ சர்பத். இதற்கு ரோஜாப்பூ மணப்பாகு என்ற பெயரும் உண்டு.


ரோஜாப்பூ குல்கந்து செய்முறை :

ரோஜாப்பூவில் இருந்து குல்கந்தும் செய்யலாம். இது உடலுக்கு போஷாக்கு தரும் சிறந்த ‘டானிக்’ போன்றதும்கூட. அதன் செய்முறை :

நல்ல தரமான நிறமுள்ள பெரிய ரோஜாப்பூக்களை வாங்கி வந்து, அவற்றின் இதழ்களை மட்டும் தனியாக சேகரியுங்கள். பூவில் ஏதேனும் புழு, பூச்சிகள் இருந்தால் அந்த மலரை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு சேகரித்த ரோஜா இதழ்களின் எடைக்கு 3 மடங்கு கற்கண்டு சேர்த்து, இரண்டையும் உரலில் இட்டு மெழுகு பதம் வரும் வரை இடித்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் இட்டு, இதன் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு தேனை விட்டு நன்கு கிளறி, காற்று புகாமல் மூடி வைக்கவும். இதுவே நல்ல தரமான குல்கந்து.

இதனை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டி, பெரியவர்கள் ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை ஆகிய இருவேளை சாப்பிட்டுவர ரத்தம் விருத்தியடையும்; ரத்தம் சுத்தமாகும்; மலச்சிக்கல் அடியோடு ஒழியும்; உடல் உள் உறுப்புகள் பலமாகும்; ரத்தபேதி, உடல் வெப்பம், வெட்டை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை


எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. நம்மவர்கள் எலுமிச்சையில் செய்யப்பட்ட ஊறுகாய் என்றால் எந்த சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிப்பார்கள்.
இத்தகைய எலுமிச்சையில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச் சத்துகள் காணப்படுகின்றன.


மருத்துவ பயன்கள் :

* தேள் கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.

* தலைவலிக்கு கடுங்காபியில் (ப்ளாக் காபி) எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் சட்டென்று குணமாகும்.

* நீர் சுருக்கு, பித்த நோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

* மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

* கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

* எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்துவர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

* அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

* நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.


* எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

* சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து, அதை எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

* சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

* எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பீனிசம் தீரும்.

* சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் பூசி வர படர்தாமரை குணமாகும்.

* சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். அதில், தேவையான அளவு எடுத்து, அதை ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீர்ணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

சனி, 13 பிப்ரவரி, 2010

மஞ்சள்


ஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள். எந்தவொரு சுப காரியத்தை ஆரம்பித்தாலும் மஞ்சள் தடவிய பின்னரே ஆரம்பிப்போம்.

திருமணத்தின்போது மஞ்சளுக்கு தனி சிறப்பிடம் கொடுக்கிறோம். திருமண அழைப்பிதழின் ஓரங்களில் மஞ்சள் தேய்ப்பதோடு, மணமக்கள் மீது அட்சதை தூவும்போதும் அரிசியுடன் மஞ்சளையும் கலந்துகொள்கிறோம்.

வசதி படைத்தவர்கள் தங்கத்தால் தாலி செய்து கொள்கிறார்கள். ஆனால், பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு அப்போதைய தங்கம் இந்த மஞ்சள்தான். அதை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி தாலியாக பயன்படுத்துகிறார்கள்.

திருமணம், கோவில் விழாவின்போது மஞ்சள் பொடியை காற்றில் தூவும் வழக்கம் உண்டு. இவ்வாறு செய்வதால், அந்த கூட்டத்தில் மாசு கலந்த காற்று சுத்தமான காற்றாக மாறுகிறது. இதனால் தான், சில இடங்களில் மணமக்களுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடத்துகிறார்கள்.


 கோவில்களில் மஞ்சள், திருமஞ்சனத்தால் சாமி சிலைகளுக்கு அபிஷேகம் நடைபெறுவதை காண்கிறோம். சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் நீரை தீர்த்தமாக பருகும்போது, நம் உடலில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் அழிகின்றன. இதனால் ஆரோக்கியம் கிடைத்து ஆயுளும் நீள்கிறது.

இன்னும் ஒரு உதாரணம்;

அம்மன் கோவில் திருவிழாவின்போது விரதம் மேற்கொள்ளும் ஆண்கள், பெண்கள் மஞ்சள் துணி அணிந்திருப்பதை காண்கிறோம். இவ்வாறு மஞ்சள் ஆடை அணியவும் காரணம் இருக்கிறது.

மஞ்சள் ஆடை அணிவதால் உடலில் உள்ள வெப்பம் அகற்றப்பட்டு, மனதில் அலை பாய்ந்து கொண்டிருக்கின்ற கொடிய எண்ணங்களில் இருந்தும் விடுபடுகிறோம்.

மருத்துவ பயன்கள் :


1. குழந்தை இல்லாத பெண்கள், மாதவிலக்கு சமயம் அந்த 3 நாட்களும் ஒரு அவுன்ஸ் தண்ணீரில் 4 சிட்டிகை சுத்தமான மஞ்சள் பொடியை கலக்கி வெறும் வயிற்றில், மதியம், மாலை என்று மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.

2. பெண்களின் தோல் பகுதி மிகவும் மென்மையானது. அதனால் கிருமி தொற்றுதலுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் உண்டு. அதனால் தான், பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்கச் சொல்கிறோம்.

3. சைவம் ஆனாலும் சரி, அசைவம் ஆனாலும் சரி, மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் விஷத்தன்மை ஏற்படாது.

4. பாதாம் பாலுடன் கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை சக்தி பெருகும்.
மூலம், பவுத்திரத்தால் அவதிப்படுபவர்கள் ஒரு டீஸ் பூன் வெண்ணெயில் சிறிது மஞ்சள் பொடியையும் கலந்து, அந்த கலவையை உள் மூலத்திற்கும், வெளிமூலத்திற்கும் தடவி வந்தால் நாளடைவில் நல்ல குணம் கிடைக்கும்.

5. குளிக்கும் தண்ணீருடன் சிறிதளவு மஞ்சள் பொடியையும் சேர்த்து கலக்கி, அதை சூரிய ஒளியில் வைத்து, சிறிதுநேரம் கழித்து குளிப்பது நல்லது. சூரியஒளி சக்தியினால் மஞ்சள் மேலும் வீரிய சக்தி பெற்று நோயை தடுக்கும் மருந்துபோல் செயல்படுகிறது. அம்மை நோய்க்கு மட்டுமல்ல; சாதாரண நாட்களிலும் ஆண்-பெண் இருபாலரும் இப்படி மஞ்சள் தண்ணீரில் குளிக்கலாம்.

6. மஞ்சளையும், சந்தனத்தையும் கலந்து நெற்றியில் திலகமிட்டால் அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்கள் அதில் இருந்து விடுபடுவார்கள். மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தால் விலகிவிடும். மூளை, நரம்பு மண்டலம் அப்போது குளிர்ச்சி அடைவதே இதற்கு காரணம்.


7. மஞ்சள் பொடியை உடலில் பூசி குளிப்பதால் கவர்ச்சியான நிறத்தை பெறலாம். அதாவது தோல் பளபளப்பாகும். இதனால்தான் ஹோலி பண்டிகையின்போது மஞ்சள் தூவி விளையாடுகிறார்கள்.

8. தொற்றுநோய் உள்ள பகுதியில் மஞ்சள் நீரையோ, மஞ்சள் பொடியையோ தெளித்து வந்தால், அந்த நோய் மற்ற பகுதிகளுக்கு பரவாது. வந்த பகுதியிலும் அதை கட்டுப்படுத்தலாம். வீட்டு வாசலில் மஞ்சள் கொத்தை கட்ட காரணமும் இதுதான்.

9. ஈக்களின் தொல்லையை கட்டுப்படுத்த, மஞ்சள் நீரில் துளசி இலைகளை தேவையான அளவு சேர்த்து கலந்து, ஈ உள்ள பகுதிகளில் தெளித்து வந்தாலே போதும். ஈக்கள் தொல்லை குறைந்து விடும்.

10. தொடர்ச்சியான இருமல் உள்ளவர்கள் சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து தினமும் 3 வேளை வீதம் பருகி வந்தால் இருமல் காணாமலேயே போய்விடும்.

11. சுட்ட அல்லது வறுத்த மஞ்சள் பொடியை பாலில் சிறிதளவு கலந்து சில நாட்கள் தொடர்ச்சியாக பருகி வந்தால் மேக நோய் குணமாகும்.


மஞ்சளில் இனிய இல்லறம்

முன்பெல்லாம் பெண்கள் குளிக்கும்போது மஞ்சளை உபயோகிக்க மறக்க மாட்டார்கள். அந்த மஞ்சள் தரும் இயற்கை அழகில் மினுமினுத்தார்கள். ஆனால், இன்றோ அதன் நிலை தலைகீழாக மாறிவிட்டது.

இன்றைய நவநாகரீக பெண்களுக்கு மஞ்சள் என்றால் என்ன என்று பாடம் எடுத்தால் தான் புரிகிறது. அவர்களை மஞ்சள் பூசி குளிக்க என்று சொன்னால், "எவ்வளவோ பியூட்டி சோப்புகள், ஸாம்புகள் இருக்கும்போது மஞ்சள் எதுக்கு?" என்று திருப்பிக் கேட்கிறார்கள். உண்மையிலேயே மஞ்சளைப் போன்ற இயற்கையான அழகு சாதனம் வேறு எதுவுமே கிடையாது.

பெண்களை இயற்கை அழகை மிளிரச் செய்யும் இதே மஞ்சள் தான், இனிய இல்லறத்திற்கும் காரணமாகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகளால் ஏராளமான கணவன்மார்கள் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களால் இனிமையான இல்லறத்தை அனுபவிக்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்களின் மனைவிமார்கள் தினமும் மஞ்சள் பூசி குளித்தாலே, அவர்களின் இந்த குறைபாடு நீங்கி விடும்.

அது எப்படி தெரியுமா?

மஞ்சள் பூசி குளிக்காத பெண்களின் கணவன்மார்களுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. காரணம், பெண்களுக்கு மூன்று மடங்கு உஷ்ணம் அவர்கள் உடலில் உள்ளது தான்.
இது இயற்கை.

ஒன்று... உணவு சீரணமாவதற்கும், இரண்டு ... மாதவிலக்கு ஆவதற்கும், மூன்று ... கருத்தரிப்பதற்கும் என்று இந்த உஷ்ணத்தை இயற்கையே பெண்களின் உடலில் உருவாக்கி வைத்துள்ளது.

கணவனும், மனைவியும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, மனைவி உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கணவனின் உடலுக்கு கடத்தப்படுகிறது. இதனால், அந்த கணவனுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும்போது அவர்களது உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது.

அவர்கள், கணவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது, அவர்களது உடல் வெப்பம் கணவனது உடலுக்கு அதிகம் கடத்தப்படாது. அதனால், கணவனுக்கு ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.